Sunday, January 25, 2004

 
அசரீரி

எனக்கொரு நண்பர் உண்டு. அவரைச் செல்லமாக அசரீரி என்று அழைப்பேன். அசரீரி என்பது புராணக் கதைகளில் அவ்வப்போது தோன்றிக் குரலை மட்டும் காண்பிக்கும். அசரீரிக்கு உருவம் கிடையாது. கதாப்பாத்திரங்கள் தங்களுக்குள் பேசிக்கொன்டிருக்கும்போது, திடீரென்று அசரீரியின் குரல் கேட்கும். அசரீரியிடம் நேரடியாக யாரும் பேசியிருக்க மாட்டார்கள். ஆனால் அது தானாகவே எல்லோருக்கும் கேட்கும் வகையில் பேசிவிடும்.

நமது நண்பரும் கிட்டத்தட்ட அப்படித்தான். யாராவது இருவர் உரையாடிக்கொன்டிருக்கும்போது, நண்பர் தனது மூக்கை நுழைத்துத் தனக்குத் தோன்றியக் கருத்தை பட்டென்று கூறி விடுவார். அப்போது உரையாடலில் இருக்கும் விஷயத்திற்கு சம்பந்தம் இருக்கிறதா இல்லையாவென்றெல்லாம் யோசிக்க மாட்டார்.

"உங்கள் வீட்டில் 'டிகாக்ஷன்' காபியா அல்லது 'இன்ஸ்டன்ட்' காபியா?" - முதலாமவர்.

"டிகாக்ஷனுக்கெலாம் ஏது நேரம், இன்ஸ்டன்ட் தான்" - இரண்டாமவர்.

"காபி குடித்தால் இளம் வயதிலேயே மாரடைப்பு வந்து விடுமாமே" - அசரீரி நண்பர்.

கல்யாண வீட்டில் சாப்பிட்டுக் கையலம்பும் இடத்தில்,
"அடடா, உருளைக்கிழங்கு ரோஸ்ட் ப்ரமாதம்" - மு.

"ஆமாமாம், இந்த மாதிரி எங்கேயும் சாப்பிட்டதில்லை" - இ.

"வாழைக்காய் மூட்டுவலிக்கு ரொம்ப நல்லதாம்" - அ.ந.

கதையில் அப்போது வரும் ஒரு பிரச்சினையைத் தீர்த்து வைப்பதாகவோ, பிற்காலத்தில் வரப்போகும் ஒரு பிரச்சினையை உணர்த்துவதாகவோ அசரீரியின் கருத்து அமையும். நமது நண்பரிடம் அதையெல்லாம் எதிர்ப்பார்க்க முடியாது. பிரச்சினையே நண்பர்தான். என்னதான் அசரீரி மாதிரி உருவம் இல்லாதது, இருப்பதை மறந்து விட்டுப் பேசலாமென்றாலும், அந்தக் குரலை வெகு நேரம் உதாசீனம் செய்ய முடியாது. பொறுமையிழந்து பதில் பேசி விடுவோம்.

"சே, சச்சின் எதிர்ப்பார்த்த அளவு ரன்னே அடிக்கலை" - நான்.

"டெஸ்ட் மேட்சில் அப்படித்தான் இருக்கும். ஒன் டேயில் பாருங்கள், நல்லா விளாசப்போறார்" - நண்பர் 1.

"என்னைக் கேட்டால் கிரிக்கெட் மேட்ச்சே ஒரு வேஸ்ட்னு சொல்லுவேன்" - அ.ந.

நான் கஷ்டப்பட்டுப் பொறுமையைக் கடைப்பிடித்து, "உங்களை நாங்க கேட்கவேயில்லயே" என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு, மீண்டும் சம்பாஷணையை தொடருவேன்.

"பாகிஸ்தானிடம் அவருடைய பாச்சா பலிக்குமானு பாக்கணும்"

"சும்மா கதறக் கதற அடிக்கப் போறார் பாருங்களேன்"

"கிரிக்கெட் பந்து மேல பட்டா என்னமா வலிக்கிறதே. ஏன் ரப்பர் பந்தில் விளையாடினா என்ன கேடுனு கேக்கறேன்" - அ.ந.

"ஐயா சாமி, ஆளை விடுங்க. கிரிக்கெட் விளையாடறதே வேஸ்ட் தான். தாராளமா ரப்பர் பந்தில் விளையாடலாம். அது கூட சில சமயம் வலிக்கும். பேப்பர் பந்து தான் சரி. எதுக்கு வம்பு, பேசாமல் எல்லாரும் "புக் கிரிக்கெட்" ஆட ஆரம்பிக்கலாம். இப்போ திருப்தியா?" என்று பொறுமை இழந்து விடுவோம்.

"கோவிச்சிக்காதீங்க, ஏதோ என் மனசில் பட்டதைச் சொன்னேன். உங்க எல்லாம் அளவு எனக்கு உலக அனுபவம் அவ்வளவு கிடையாது. எனக்குத் தெரிந்த நாலு விஷயத்தைப் பத்தி பேசலாம்னு பேசிட்டேன். தப்பா இருந்தா மன்னிக்கணும்" என்று அசரீரி நண்பர் ஒரே சென்டிமென்டாக பதில் சொல்ல நமக்கு மனசு கேட்காது.

"ஹ.. அதனால் என்ன .. நீங்க சொன்னதும் ஒரு விதத்தில் நியாயந்தானே" என்று சொல்லிவிட்டு "என்ன, போட்டோ எடுக்கணுமா, இதோ வரேன்" என்று நமக்கு மட்டும் கேட்ட அசரீரியைக் காரணம் காண்பித்துவிட்டு மெதுவாக நழுவ வேண்டியிருக்கும்.

உங்களில் யாருக்காவது அசரீரி நண்பர்கள் நிச்சயம் இருப்பார்கள். அவர்களை எப்படி சமாளிப்பது என்று ஏதாவது புது ஐடியா இருந்தால் சொல்லுங்களேன், ப்ளீஸ்..

Saturday, November 08, 2003

 
போன வாரம் எழுதிய குறிப்பு சரியாக போஸ்ட் ஆகவில்லை. கஷ்டப்பட்டு எழுதிய பிறகு 'போஸ்ட்' -ஐ அழுத்தியவுடன், அழகான தமிழ் அலங்கோலமாகி விட்டது. என்னுடைய முதல் குறிப்பை 'ப்லாகரி'ல் நேராக எழுதாமல், சுரதாவின் யுனிகோடு பக்கத்தில் எழுதி பின்னர் 'ப்லாகரி'ல் ஒட்டினேன். பிறகு இந்த எ-கலப்பை மற்றும் யுனிகோடு தட்டச்சுப்பெயர்ப்பு (Unicode Keymap) பற்றி அறிந்தவுடன், போன வாரம் 'ப்லாகரி'ல் நேராக எழுதலாமென்று முயற்சி செய்தேன். என்ன முயன்றும் அந்த அலங்கோலத்தை சரி செய்ய முடியவில்லை. அட அதுதான் முடியவில்லை, என்ன செய்தால் அது போல ஆகிறது என்று தெரிந்து கொண்டு, இனி அதைத் தவிர்க்கலாம் என்று பார்த்தால், அப்புறம் சோதனையாக போஸ்ட் செய்தது எல்லாம் சரியாக இருந்து தொலைத்து விட்டது. 'மர்ஃபிஸ் லா' (Murphy's Law) என்று கூறுவார்களே அது போல.
எனவே தனது முயற்சியில் சற்றும் மனம் தளராத நான் மீண்டும் இந்த வாரம் 'ப்லாகரி'ல் நேராக எழுதி போஸ்ட் செய்ய முயல்கிறேன். நல்ல மாட்டுக்கு ஒரு சூடு என்பதால், இந்த முறை 'போஸ்ட்'டை அழுத்துவதற்கு முன் நான் எழுதியதை 'வேர்ட்பேடி'ல் (WordPad) நகல் எடுத்து பாதுகாக்கப் போகிறேன்.

Sunday, October 26, 2003

 
பிள்ளையார் சுழி
கணினியில் தமிழைப் பயன்படுத்த வேண்டும் என்பது என் நீண்ட நாள் அவா. பதினோரு வருடங்களுக்கு முன்னால் ஜார்ஜியா டெக் (Georgia Tech) கல்லூரியில் முதன்முதலில் ஒரு மேக்கின்டாஷ் (Macintosh) கணினியில் டாக்டர் கோவிந்தராஜ் அவர்களின் 'பல்லடம்' எழுத்துரு (Font) மூலமாக தமிழை எழுதி திரையில் பார்த்தபோது திறந்த வாய் இன்று யுனிகோடில் (Unicode) இணையப் பக்கத்தில் எழுதும்போதும் மூடவில்லை. அத்தகைய வியத்தகு முன்னேற்றம். அப்போதெல்லாம் திரையில் தமிழைப் பார்த்து, 'ப்ரிண்ட்' எடுத்து, ஊருக்கு கடிதம் அனுப்புவது ஒரு மிகப் பெரிய விஷயம். தமிழில் மின் அஞ்சல் (Email) அனுப்புவது என்பது நினைத்துப் பார்க்கவே முடியாது. அது இணைய தளங்கள் (web sites) இல்லாத இணையம் (Internet). இணையத்தில் அப்போது பயன்பட்டு வந்தது, மின் அஞ்சல் மற்றும் செய்திக்குழுக்கள் (Newsgroups) மட்டுமே. அவ்விடங்களில் தமிழை ஆங்கில எழுத்துக்கள் கொண்டு தான் எழுதுவார்கள் (Transliteration). 'soc.culture.tamil' என்கிற செய்திக்குழுவில் பல கவிதைகள், கட்டுரைகள், ஏன் நாவல்கள் கூட (ஒரு நண்பர் சுஜாதாவின் 'பிரிவோம் சந்திப்போம்' நாவலின் சில பகுதிகளை எழுதியதாக ஞாபகம்) அந்த முறையில் வெளிவந்துள்ளன. அங்கே ஆரம்பித்தது, பல தொழில்நுட்ப இன்னல்களைக் கடந்து இந்த இடத்திற்கு வந்திருக்கிறோம். யுனிகோட் (Unicode) உதவியால் இனி ஒரே முறையில் எல்லோராலும் கணினியில் தமிழ் எழுதப் படிக்க முடியும். அம்முறையில் மேன்மேலும் பல இணையத்தளங்கள் தோன்ற வேண்டும். தோற்றுவிப்போம்!!

This page is powered by Blogger. Isn't yours?